புதன், 18 ஜனவரி, 2012

வீரலக்கம்மா கதை



தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள நாவலாக்கன்பட்டி என்னும் ஊரில் மரத்தடியில் அமைந்துள்ள வீரலக்கம்மா , ராஜகம்பளம் சாதியல் உள்ள சில்லவார் - நாமகாரு என்னும் குலத்தவர்களுக்கு குலதெய்வமாக இருக்கின்றார்.

வீரலக்கம்மா கதை

ஒரு காலத்தில் எட்டயபுரம் பகுதியில் அதிகமாகக் குடியேறிய ராஜகம்பள நாயக்கர்கள் மாந்தரிகம், கோடாங்கி பார்ப்பது , குறி சொல்லுவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வாறான கோடாங்கியர் குடும்பத்தில் பிறந்து எட்டயபுரம் பகுதிக்கு மிக அருகில் உள்ள சுரைகாப்பட்டி என்னும் ஊரில் வீரலக்கம்மா - வீரலக்கய்ய என்னும் தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு வீரவேல்என்னும் ஆண் குழந்தை பிறந்தது . ஒரு நாள் வீரலக்கையா காட்டுக்கு வேட்டைக்கு சென்று விட்டார் . தனது சிறு குழந்தை வீரவேலை தூக்கி கொண்டு காட்டு வேலை செய்வதற்காக வீரலக்கம்மா சென்றார். அங்கு தனது கணவரின் குலமான நாமகாரு மக்களிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வயல் வேலைகளில் ஈடுபட்டார் . ஆனால் நாமகாரு மக்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளாமல் சென்று விட்டனர். அப்பகுதிக்கு வந்த நரி ஒன்று குழந்தையை கொன்று தூக்கி சென்று விட்டது.

வேலை முடிந்து திரும்பிய லக்கம்மா தனது குழந்தையை நாமகாரு மக்களிடம் கெட்டார். ஆனால் அவர்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை எங்களுக்கு தெரியாது என்றனர் . தனது மகனைத்தேடி நாவலாக்கன் பட்டி காட்டு பகுதிக்கு சென்ற லக்கம்மா ஒரு மரத்தடியில் நின்றார். மரத்தின் மீது வீரவேல் குழந்தையின் கொலுசு ஒன்றை காகம் பிடித்து ஒழி எழுப்பியது. தனது மகன் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்த அவள் அழுது புலம்பினார். அங்கு நமகாரு மக்கள் வருகின்றனர் அவர்களை நோக்கி அவள் அழுதுகொண்டே என் மகன் இறப்பிற்கு உங்கள் குலம் தான் காரணம் , என் இனமாக இருந்தால் இப்படி விடுவார்களா என்று கதறி அழுதார். அவளின் அழுகையைக் கூட பெரியதாய் எண்ணாமல் நாமகாரு மக்கள் கழுத்தினைத் திருப்பிக் கொண்டனர். கோபம் கொண்ட லக்கம்மா திரும்பிய கழுத்து அப்படியே திரும்பட்டும் என்றும் , நீங்கள் எவ்வளவு பணம் சேர்த்தாலும் அது உங்கள் கைக்கு நிற்காது என்று சாபம் விட்டார். " நாமகாணி சமந்தம் நாதோடி போகனா " அதாவது நாமகாரு மக்களிடம் வைத்துள்ள சமந்தம் என்னுடனே போகட்டும் என்று சாபம் விட்டார். பிறகு அந்த மரத்தின் அடியிலேயே மறைந்து சாமி ஆனார் ,அவளின் கணவனும் அங்கு சென்று கடவுளாக மாறினார். பிறகு மனம் மாறிய நாமகாரு மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும் படி கேட்டுக்கொள்ள அவளும் மனம் மாறி சாபத்தினை விலக்கினார்.

இனத்து மக்கள் நம்பிக்கை

இன்றும் நாமகாரு இனத்து மக்களுக்கு தனது வாழ்நாளில் ஒரு முறையாவது கழுத்தில் ஏதாவது சிறிய அளவில் கோளாறுகள் அமையும் என்று நம்பப்படுகிறது . மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இவ்வம்மன் கருதப்படுகிறார்.

குல சாமி வழிபாடு

மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி , அமாவாசை காலத்தில் சுற்று புறங்களில் உள்ள ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர் . தங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு வீரலக்கம்மா, வீர லக்கய்ய, வீரவேல் என்றே இப்பகுதி நாமகாரு இனத்தவர்கள் பெயர் சூடுகின்றனர். அம்மனுக்கு பிடித்த சுண்டல், கொழுக்கட்டை படைகின்றனர். நாமகாரு மக்கள் தாங்கள் செய்யும் எந்த செயலுக்கு முன்னும் வீரவேல் என்று சொல்லிய பிறகே தங்கள் பணிகளைச் செய்கின்றனர். குடும்பத்தோடு வீற்றிருக்கும் வீரலக்கம்மா இன்றும் இவ்வினத்து மக்களை இரவு நேரத்தில் வந்து பார்த்துச் செல்வதாக நம்பபடுகிறது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக