திங்கள், 9 ஜனவரி, 2012

திருவிளக்கு வழிபாடு



திருவிளக்கு வழிபாட்டின் மேன்மைகள்

நம் இந்து மதத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது. வேத காலந்தொட்டு நம் மகரிஷிகள் அக்னி வளர்த்து வேள்வி நடத்தி இறைவனை வழிபட்டனர். இன்று இதுவே எளிமையாக்கப்பட்டு திருவிளக்கு (தீபவழிபாடாக) மாறியுள்ளது.  திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். திருவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால் கெட்ட சக்திகள், செய்வினைகள் அணுகாது. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வெள்ளிக்கிழமைகளில்  வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின்பு அதனை வீட்டு பூசையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். நம் இல்லத்திலோ, கோவிலிலோ அல்லது பொது வழிபாட்டு மன்றங்களிலோ எழுந்தருளச் செய்வதே திருவிளக்கு வழிபாட்டின் நோக்கமாகும். இத்திருவிளக்கு வழிபாடு பெண்களுக்கு உரித்தான வழிபாடாகும். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை ஆண்பாலரும் செய்யலாம்.

திருவிளக்கு வழிபாட்டுக்கு ஏற்ற நாள் நேரம்  

பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த  நற்பலன்களைத் தரவல்லது. பல்வேறு தமிழ் மாதங்களில்  திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் தமிழ் மாதங்கள் மற்றும் அதற்குண்டான பொதுப்பலன்கள் மாறுபடுகின்றன. இவற்றின் பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  • சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
  • வைகாசி - செல்வம் செழிக்கும்.
  • ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
  • ஆடி - ஆயுள்பலம் கூடும்.
  • ஆவணி - புத்தித்தடை நீங்கும்
  • புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
  • ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
  • கார்த்திகை - நற்பேறு கிட்டும்
  • மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
  • தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
  • மாசி - துன்பங்கள் நீங்கும்.
  • பங்குனி - தர்மசிந்தனை வளரும்.

திருவிளக்கு வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய முறைகள்

1.  திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும்.

2. திருவிளக்கு வழிபாட்டின் போது  எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.  பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. 

3. திருவிளக்கேற்றும் பலன்கள்

  •  ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
  • இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
  • மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
  •  நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
  • ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

4.திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறை: திருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில்  எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது மரபு. என் இவ்வாறு செய்ய வேண்டும்?தகுந்த காரணம் இருக்கிறது. உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள்  வைக்க வேண்டும். இதனால் திருவிளக்கு வழிபாடு நிறைவாய் இருக்கும்.

5. திருவிளக்கேற்றும் திசைகள்

  • கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
  • மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
  • வடக்கு - திருமணத்தடை அகலும்
  • தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

 திருவிளக்கை கிழக்கு முகமாக வைக்கவும். வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி  அமரலாம்.

6. திருவிளக்கிற்கு மலர் சரம்  சூட்டலாம்.  விளக்கு சுடரில் இருந்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் கொளுத்துவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

7. குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது. திருவிளக்கில் அடிக்கடி எண்ணெய் ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.

  • பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
  • நல்லெண்ணெய் - பீடை விலகும்.
  • ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும். 

தெய்வங்களும் எண்ணெய் வகைகளும்

  • கணபதி - தேங்காய் எண்ணெய்
  • நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
  • மகாலட்சுமி - பசுநெய்
  • குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
  • ருத்திரர் - இலுப்பெண்ணெய்
  • பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

8. திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும், பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

  • பருத்திப் பஞ்சு -  குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
  • வாழைத் தண்டின் நார் -  முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
  • தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
  • வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
  • புதிய மஞ்சள் துணி -  நோய்கள் குணமாகும்.
  • புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
  • புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

9. திருவிளக்கை துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும். தீக்குச்சியால் ஏற்றுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். ஒரு திரி ஏற்றுவதானால் கிழக்கு முகமாக மட்டுமே ஏற்ற வேண்டும்.

10. திருவிளக்கு வழிபாட்டின் போது  விளக்கு ஏற்றிய பின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

11. திருவிளக்கு வழிபாட்டின் போது மந்திரங்கள், பதிகங்கள் மற்றும் பாசுரங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

12. திருவிளக்கு வழிபாட்டின் போது  விளக்கு ஏற்றிய பின்பு கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.

திருவிளக்கு வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்கள்.

திருவிளக்கு வழிபாட்டுக்கு ஆயத்தாமாகும் முன்னரே கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே சேகரித்து  வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு), தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு

செய்யும் முறைகள்

முதலில் வழிபாடு நடத்தும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வழிபாடு நடத்தும் முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும்.

பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும்.

எல்லோரும் சொல்லுக : ஓம்.

ஸர்வே பவந்து ஸகின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

திருவிளக்கு ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல

பின்பு கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்போது

''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''

என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்

விநாயகர் வழிபாடு

முதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். கணபதி பாடல்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.

பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.

அருச்சனை

அம்பாள் வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் மலர் அல்லது குங்கும அருச்சனை நடைபெறும். அவ்வாறு அருச்சனை செய்கின்ற போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும், மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும். மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அருச்சிக்க வேண்டும் என்பது விதி.

அம்பாள் வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே

துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

திருவிளக்கு அகவல்

திருவிளக்கு வழிபாட்டின்போது  பாட வேண்டிய திருவிளக்கு அகவல்
இது. கூட்டு வழிபாடானால் ஆண் பெண் எல்லோரும் கூட்டாகப் பாடுவது நல்லது.

விளக்கே திருவிளக்கே; வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே; சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே; அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே; காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு; எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு; மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா; பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்; தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சைமாலை கண்டேன்
Œவரிமுடி கண்டேன்; தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்; பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்; காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.

மேற்கண்ட இந்தப் பக்தி பாடலைப் பாடி முடித்தவுடன், அவரர் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.
 
கலச வழிபாடு

கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

''கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு''

பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.

எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதவேண்டும். கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.

நூற்றியெட்டு போற்றி


அர்ச்சனை செய்து முடித்தவுடன் எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதுவர்.


படையல்

 

நூற்றியெட்டு போற்றி ஓதி முடிந்தவுடன் படையல் பொருள்களை அம்மனுக்குக் காணிக்கையாக்வேண்டும். எல்லோரும் சொல்லுக.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா

பின் கீழ் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை படையல் பொருள்களை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, அபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா பிரம்மணே ஸ்வாஹா

தீபாராதனை

எல்லோரும் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுவர். இப்போது திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூரசோதி காண்பிக்கப்படும். கற்பூர சோதி காட்டும்போது சொல்லப்படவேண்டியது:.
 "திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ|
 அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ|
 எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ|
 சுங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே"
பின்பு திருவிளக்கின் முன் கற்பூர தட்டை வைத்தபடி கையில் மலரெடுத்து கற்பூர சோதியை வலம் சுற்றி திருவிளக்கிற்கு சாற்றி கற்பூர தீபத்தைத் தொட்டு வணங்குவர்.

வலம்வருதல்


அனைவரும் பின்வருமாறு அம்பாள் பெயர் போற்றி கைதட்டிப் பாடிக்கொண்டு திருவிளக்கினை மூன்று முறை வலம் வருக.

நாமம்:-

ஜெய் ஜெய் தேவி
ஜெய் ஸ்ரீ தேவி

மங்களம்

மங்களம் பாடி நிறைவு செய்யப்படும். 

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்-தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம்-ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்-வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம்-ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்

பிரார்த்தனை

அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்துவாயாக
அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழி நடத்துவாயாக
மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!

ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

இரண்டு நிமிஷம் தியானம் செய்க 'ஹரி ஓம் தத் ஸத்' எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.

பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

திருவிளக்கை அம்பாளாகக் கருதி, 16 முறை விழுந்து வணங்குவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக