வியாழன், 19 ஜனவரி, 2012

மாசி பெரியண்ணன் கோவில்

மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன் அமர்ந்திருக்கிறார். பள்ளர், கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாக விளங்குகிறது.

கொல்லி மலை


நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை. கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது. எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.

வரலாறு

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.



கல்லாத்துக் கோம்பு

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

நேர்த்திக்கடன்
  1.  பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
  2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
  3. உயிருடன் ஆடு, மாடு, கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
  4. ஆடு, மாடு, பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
  5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
  6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
  7. மணிகளை கட்டுதல், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்

மூலிகை மலை என்பதால் பல மூலிகைகள் கிடைக்கின்றன. பயன்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர். முக்கனிகளும் கிடைக்கின்றன. மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

சித்தர்கள்

இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சில கிராமத்துவாசிகள். பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையும் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லும் வழி

நாமக்கல்லிலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடந்து செல்ல வேண்டும் அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.

1 கருத்து: